நெய்வேலி இந்திராநகர் அருகே கார் மோதி படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். 
க்ரைம்

நெய்வேலி அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு: சிறுமி உள்பட 6 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி வனிதா (40), அவரது மகள் ஜனனி (15) ஆகியோர் காய்கறிகள் வாங்குவதற்காக நேற்று மதியம் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர காய்கறி கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மோதியது.

மேலும், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த இந்திரா நகர் மாற்று குடியிருப்பைச் சேர்ந்த சின்னசாமி மனைவி முத்தம்மாள் (50), கிருஷ்ணன் மனைவி ராணி (45), சின்னசாமி (65), கட்டியம்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி தங்கம் (52), பெரியாகுறிச்சியைச் சேர்ந்த சாரங்கபாணி மகன் குமரேசன் (32) ஆகியோர் மீதும் மோதியது. இந்த விபத்தில் வனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முத்தம்மாள் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த5 பேரும் கடலூர் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நெய்வேலி டவுன் ஷிப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் அக்பர் பாஷா (62) காயமடைந்த நிலையில் போலீஸார் அவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT