பிரதிநிதித்துவப் படம். 
க்ரைம்

கரூர்: தோழியின் கணவரை ட்ராக்டர் ஏற்றிக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே மொபட் மீது ட்ராக்டரை மோதி பெண் தோழியின் கணவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கொல்லப்பட்டவரின் மனைவியை வழக்கிலிருந்து விடுவித்தது.

கரூர் மாவட்டம் முடிகணத்தை சேர்ந்தவர் மனோகரன் (42). அவர் மனைவி சித்ரா (40). அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (23). இவர் சின்னதாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2019ம் ஆண்டு பிபிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் சித்ராவுக்கும் இடையே நெருக்கம் இருந்துள்ளது. இதனை மனோகரன் பல முறை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், மனோகரன் கடந்த 2019-ம் ஆண்டு செப். 24ம் தேதி மொபட்டில் நல்லிசெல்லிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தப்போது எதிரே ட்ராக்டர் ஓட்டி வந்த சுதாகர் மொபட் மீது மோதியதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த க.பரமத்தி போலீஸார் சித்ராவின் தூண்டுதலால் கொலை செய்யும் நோக்கோடு சுதாகர் ட்ராக்டரை மோதி மனோகரனை கொலை செய்ததாக கொலை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்து சுதாகர் மற்றும் சித்ராவை கைது செய்தனர்.

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி கிறிஸ்டோபர் இன்று (பிப். 17ம் தேதி) அளித்த தீர்ப்பில், கொலை குற்றத்திற்காக சுதாகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்தார். மேலும், போதிய சாட்சிகள் இல்லாததால் இவ்வழக்கிலிருந்து சித்ராவை விடுவித்தார்.

SCROLL FOR NEXT