ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள். 
க்ரைம்

சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூரில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் மரணம்?- ஆரம்ப சுகாதார நிலையத்தினரை கண்டித்து சாலை மறியல்

செய்திப்பிரிவு

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கூளாப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரதுமனைவி விஜயலட்சுமி (32). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் விஜயலட்சுமிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது விஜயலட்சுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விஜயலட்சுமியை அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஜயலட்சுமி உயிரிழந்தார்.

உயிரிழந்த விஜயலட்சுமியின் கணவர் திருநாவுக்கரசு மற்றும் அவரது உறவினர்கள், விஜயலட்சுமி உயிரிழப்புக்கு தவறான சிகிச்சையே காரணம் என்றும் அதனால் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி நேற்று ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம் தலைமையிலான போலீஸார் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT