க்ரைம்

கோவை: செபஸ்தியார் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் மாணவர் உட்பட இருவர் கைது

செய்திப்பிரிவு

கோவையில் கிறிஸ்தவ தேவா லயத்தில் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் மாணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த செபஸ்தியார் சிலையை கடந்த 23-ம் தேதி இரவு, மர்ம நபர்கள் கல்வீசி சேதப்படுத்திவிட்டு தப்பினர்.

ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கோவை வெள்ளலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மதன்குமார்(23) என்றும், 16 வயதான 10-ம் வகுப்புமாணவர் ஒருவர் என்றும் தெரியவந்தது. சிலையை சேதப்படுத்தியதை இருவரும் ஒப்புக் கொண்டதையடுத்து, போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “மாணவர், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும், மதன்குமார் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது. இருசக்கர வாகனத்தில் மாணவனுடன், தீபக் என்பவர் வந்து சிலையை உடைத்துள்ளார். மற்றவர்கள் அவருக்கு உடந்தையாக வந்துள்ளனர்.

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சிலையை உடைத்ததாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். தீபக் உள்ளிட்ட இருவரை தேடி வருகிறோம்,’’ என்றனர்.

SCROLL FOR NEXT