பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

க.சக்திவேல்

கோவை: குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆன பெண்ணைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை பொள்ளாச்சியைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதையடுத்து, இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த, அந்தப் பெண்ணின் அண்ணனின் நண்பர்களான பொள்ளாச்சி குமரன் நகர்
முதல் லே அவுட்டைச் சேர்ந்த விமல்ராஜ் (32), இரண்டாவது லே அவுட்டைச் சேர்ந்த கார்த்தி (27) ஆகியோர் பெண்ணின் வீட்டுக்குக் கடந்த 2016 ஜூலை 16-ம் தேதி இரவு வந்துள்ளனர். பின்னர், 'வீட்டில் இதுபற்றிப் பேச வேண்டாம். கணவரையும், அண்ணனையும் வெளியில் ஒரு இடத்துக்கு வரவழைத்து பேசிக்கொள்வோம்' என்று தெரிவித்துள்ளனர்.

இதை நம்பி, தனது 5 மாதக் குழந்தையை வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுடன் ஆட்டோவில் அந்தப் பெண் சென்றுள்ளார். வடுகபாளையம் புத்துமாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, ஆட்கள் நடமாட்டம் குறைவான இடத்தில் விமல்ராஜ் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப்போது கார்த்தி, விமல்ராஜ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணின் கைகளை பெல்ட்டைக் கொண்டு கட்டிவிட்டு, அடித்து துன்புறுத்தி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி இன்று (ஜன.6) தீர்ப்பளித்தார். அதில், பெண்ணைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக விமல்ராஜ், கார்த்தி ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஆஜராகாத கார்த்திக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து
உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளார்.

SCROLL FOR NEXT