கோவை விமானநிலையத்தில், கைத்துப்பாக்கி எடுத்து வந்த கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கோவை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமானநிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் துணிப்பையில், 22 எம்.எம் அளவு கொண்ட பழைய கைத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருந்தன.
இதையடுத்து, விமானநிலைய அதிகாரிகள், பீளமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து விசாரித்ததில், கைத்துப்பாக்கி கொண்டு வந்தவர் கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.பி.ஏ.தங்கல் (60) என்பதும், பட்டாம்பி நகராட்சியின் முன்னாள் தலைவர் என்பதும் தெரியவந்தது. இவர் கோவையில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல இருந்தார்.
துணிகளோடு துப்பாக்கி, தோட்டாக்கள் இருந்தது தெரியாமல் அவற்றை எடுத்துவந்துவிட்டதாக கே.எஸ்.பி.ஏ.தங்கல் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தங்கல் மீது ஆயுத தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.