பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பரமக்குடி அருகே உள்ள கிராமத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு (40), சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா (39) ஆகியோர் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பரமக்குடி மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ராமராஜா கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த ஆல்பர்ட் வளவன் பாபுவை தேடி வந்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுபத்திரா முன்னிலையில் ஆல்பர்ட் வளவன் பாபு நேற்று சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.