க்ரைம்

5 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர்: 5 ஆண்டுகள் சிறை, அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 5 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 5 வயதுச் சிறுமியைக் கடந்த 14.12.2013 அன்று, வீட்டு உரிமையாளர் மகன் பூபாலன் என்பவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்துச் சிறுமியின் தாய் W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பூபாலன் (23) கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை, உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி, வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கில் பூபாலன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்பேரில் பூபாலன் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகரக் காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT