க்ரைம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் பிரியாணிக் கடை நடத்துபவர் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை 

என்.கணேஷ்ராஜ்

தேனி மாவட்டம் சின்னமனூரில் பிரியாணிக் கடை நடத்தி வருபவர் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்கு ரத வீதியில் பிரியாணிக் கடை நடத்தி வருபவர் யூசுப் அஸ்லாம் என்ற உதயகுமார். இவரது சொந்த ஊர் மதுரை.

இவர் சின்னமனூரைச் சார்ந்த இஸ்லாமிய பெண் ஒருவரைக் காதலித்துவந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அவரை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அப்போது, உதயகுமார் என்ற தனது பெயரை யூசுப் அஸ்ஸலாம் என மாற்றிக் கொண்டுள்ளார்.

இதனிடையே யூசுப் சின்னமனூர் வடக்கு ரத வீதியில் பிரியாணிக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென இவரது வீட்டில் தேசிய புலனாய்வுத் துறையைச் சார்ந்த ஆய்வாளர் மைக்கேல் தலைமையிலான மூவர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாலையில் இருந்து சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துகளைப் பதிவு செய்ததாகவும் அதன் காரணமாக தீவிரவாத இயக்கங்கள் போன்றவற்றில் அவருக்குத் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

யூசுப்பின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களைக் கொண்டு தொடர்ந்து தேசிய புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென சின்னமனூரில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.

தற்போது, யூசுப் அஸ்லாமை சின்னமனூர் காவல் நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT