க்ரைம்

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: கணவன் - மனைவி பலி

வி.சுந்தர்ராஜ்

கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் பலியாகினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு (60). இவரது மனைவி மீனா (55), இவர்களின் மருமகன் ரமேஷ் (36) ஆகிய மூவரும் கும்பகோணத்தில் உள்ள ஓட்டலில் சமையல் செய்வதற்காக ஒரே இருசக்கர வாகனத்தில், இன்று காலை சென்றனர்.

வண்டியை ரமேஷ் ஓட்டிச் சென்ற நிலையில், கும்பகோணம் கள்ளப்புலியூர் அருகே சென்றபோது, கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சோமு, அவரது மனைவி மீனா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதில் ரமேஷ் பலத்த காயம் அடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய கார்

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாலுகா போலீஸார், இறந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காயமடைந்த ரமேஷை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்பட்டது குறித்து கார் ஓட்டுநர் கோபிநாத்திடம் (42) தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT