க்ரைம்

கமுதி அருகே கார் டூவீலர் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் மரணம்; டூவீலர் தீப்பிடித்து எரிந்தது

கி.தனபாலன்

கமுதி அருகே காரும், டூவீலரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒருவர் உயிரிழந்தார். டூவீலர் தீப்பிடித்து எரிந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் (49). பத்திர எழுத்தரான இவர் இன்று அபிராமத்தில் இருந்து பார்த்திபனூர் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பார்த்திபனூரிலிருந்து கமுதி நோக்கி வந்த காரும், ராமநாதனின் டூவீலரும் குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோயில் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேகத்தில் டூவீலர் தீப்பிடித்து எரிந்தது. காரும் தலைகுப்புற கவிழ்ந்தது. கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து அபிராமம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT