காரைக்குடியில் காங்., பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு, கத்தியுடன் மிரட்டியது குறித்து போலீஸார் விசாரித்தனர். 
க்ரைம்

சிவகங்கை  மாவட்ட காங்., பிரமுகரிடம் பைப் வெடிகுண்டு, கத்தி காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டியவர் கைது

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்., பிரமுகரிடம் பைப் வெடிகுண்டு, கத்தியுடன் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி பர்மா காலனியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடி. மாவட்ட காங்., துணை தலைவராகவும், காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளார்.

இவரது வீட்டிற்கு இன்று காலை தமிழ்தேசம் மக்கள் கட்சியைச் சேர்ந்த தமிழ்குமரன் (38) என்பவர் வந்துள்ளார். அவர் மாங்குடியிடம் ரூ.1 கோடி கேட்டுள்ளார்.

பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தமிழ்குமரன் தனது கைப்பையில் வைத்திருந்த 2 பட்டாக்கத்திகள், பைப்வெடி குண்டு, நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை டேபிள்மேல் வைத்து மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மாங்குடி காரைக்குடி வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீஸார் தமிழ்குமரனை கைது செய்து, அவரிடமிருந்த ஆயுதங்களை கைபற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கெனவே ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டில் வெடிகுண்டு வீசுவதாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்த வழக்கில் தமிழ்குமரன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கைது செய்யப்பட்ட தமிழ்குமரனிடம் சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதன், கூடுதல் எஸ்பி முரளிதரன், டிஎஸ்பி அருண் ஆகியோர் வெடிகுண்டு வைத்திருந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து சிவகங்கையில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டின் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT