கோவை: தனியார் நிறுவன ஊழியரை அடித்துக் கொன்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்(45).
இவர் சிங்காநல்லூரில் உள்ள மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். 2018 நவம்பர் 5-ம் தேதி ஏடிஎஸ்சி சாலையில் உள்ள மதுபானக் கூடத்துக்கு ஆனந்த் மது அருந்தச் சென்றார்.
அப்போது ஆனந்துக்கும், அருகே மது அருந்திக் கொண்டிருந்த சதீஷ்குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், தன் நண்பர்கள் வின்சென்ட், சிவமூர்த்தி, ஜெயக்குமார், விவின் தாஸ், கார்த்திக் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து ஆனந்தை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறுவன் மீதான விசாரணை
இது தொடர்பாக பொள்ளாச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமார், வின்சென்ட், சிவமூர்த்தி, ஜெயக்குமார், விவின் தாஸ், கார்த்திக் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சிறுவன் மீதான விசாரணை, சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வருகிறது.