க்ரைம்

பயணிகள் போல் ஆட்டோவில் பயணித்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கும்பல் கைது: கடந்த 3 மாதங்களில் சென்னையில் 1,685 கிலோ பறிமுதல்

செய்திப்பிரிவு

ஆட்டோவில் பயணிகள் போல் பயணித்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 10 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்ய ‘போதைக்கெதிரான நடவடிக்கை’ என்ற சிறப்பு நடவடிக்கை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 6-ம் தேதி ஆந்திராவிலிருந்து சென்னைக்கு டேங்கர் லாரிக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 510 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, சென்னையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக வடசென்னை காவல் இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

போலியான பதிவு எண்

இந்நிலையில், வடசென்னையின் திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோக்களில் சில பெண்கள் பயணிகள் போல அமர்ந்து கொண்டு கஞ்சா கடத்தி விற்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட எண் கொண்ட ஆட்டோவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அது போலி எண் என்பது தெரிய வந்தது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட எண் கொண்ட ஆட்டோவின் பின் பக்க புகைப்படம் முகநூலில் இருந்த தகவல் கிடைத்தது. அந்தப் படத்தை பதிவிட்டவர் குறித்து, சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரித்தபோது அது திருவொற்றியூரைச் சேர்ந்த மணி என்ற குடுமி மணி(32) என்பதும், ஆட்டோவில் கஞ்சா கடத்தி விற்று வந்தது அவர்தான் என்பதும் உறுதியானது.

அவரிடம் விசாரித்தபோது, தனது மனைவி உட்பட மேலும் சில பெண்களை ஆட்டோவில் பயணிகள் போல் அமர வைத்து போலீஸாருக்கு சந்தேகம் வராத வகையில் கஞ்சா கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மணி உட்பட 6 ஆண்கள், 4 பெண்கள் என 10 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 செல்போன்கள், 10 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் சென்னையில் 1,685 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT