ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நகைக்கடையில் தன் கைவரிசையைக் காட்டி ரூ.4 கோடி பெறுமான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிய கடைப் பராமாரிப்புப் பணியாளர் ஒருவரை விஜயவாடா போலீஸ் சில மணி நேரங்களில் பிடித்துக் கைது செய்தது.
கைது செய்த நபரிடமிருந்து போலீஸார் 7 கிலோ தங்கம், 19 கிலோ வெள்ளி, ரூ.42 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் பி.ஸ்ரீனிவாசலு தெரிவித்தார். குற்றவாளியின் பெயர் விக்ரம் குமார் லோஹர், இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இந்த நகைக்கடையில் அவர் பரமரிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:
விஜயவாடா கதுரிவரி தெருவில் உள்ள சாய்சரண் நகைக்கடையில் ரூ. 4 கோடி மதிப்பிலான நகைகள் வெள்ளியன்று திருட்டுப் போயின. நகைக்கடை உரிமையாளர் கட்டிடத்தில் லாக்கர் வைத்து அதில் தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவற்றை வைத்திருக்கிறார்.
குற்றவாளி விக்ரம் குமார்தான் லாக்கரின் பராமரிப்பாளர், இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இவருக்கு மாற்று ஊழியர் ஒருவர் லாக்கர் பாதுகாவலுக்காக வந்த போது விக்ரம் குமார் காயமடைந்த நிலையில் கட்டிப் போடப்பட்டிருந்ததைக் கண்டார். நகைகளும் களவாடப்பட்டிருந்தன.
இதனையடுத்து சிறப்புக் காவலர் குழு தேடல் வேட்டையில் இறங்கியது. பராமரிப்பாளர் மீது சந்தேகம் ஏற்பட சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தது. அப்போதுதான் விக்ரம் தான் இதன் பின்னணியில் இருப்பதைக் கண்டுப்பிடித்தோம். நகைகள் ரொக்கங்களை திருடி இர்ண்டு பெரிய பைகளில் போட்டு கட்டிடத்துக்கு பின் பகுதியில் வைத்துள்ளார். பிறகு தானே காயப்படுத்திக் கொண்டு நாடகமாடியுள்ளார்.
இவரைப் பிடித்து விசாரித்ததில் விக்ரம் குமார் உண்மையக் கக்கினார். இந்த திருட்டை சில மணி நேரங்களில் கண்டுப்பிடித்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது, விரைவில் இவர்களுக்கு உரிய விருது அளிக்கப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.