க்ரைம்

அரசு மருத்துவர்கள், செவிலியர்களை மிரட்டிய நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு

செய்திப்பிரிவு

சேலத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மிரட்டிய நபருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுராஜ் (32). இவர் கடந்த ஏப்ரல் 24 அன்று சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு பல் வலி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததாக சாமுராஜ் மீது ஓமலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சாமுராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, ‘மனுதாரர் கரோனா தொற்று காலகட்டத்தில் தன்னலமின்றி சேவையாற்றி வரும் அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் தரக்குறைவாகப் பேசி மிரட்டியுள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT