போலீஸ் என எழுதப்பட்ட வானகத்தில் நள்ளிரவில் ஆசிரியரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் குறித்து ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை ராமநாதபுரம் பஜார் போலீஸார் கடந்த ஜூன் 10-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஆசிரியர் ஆனந்த், சென்னையைச் சேர்ந்த நீதிமணியுடன் இணைந்து நடத்திய நிதி நிறுவனத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் ஏஜெண்டாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
ஏராளமான ஆசிரியர்களும் பணம் செலுத்தி ஏமாந்ததாக தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் முதலீடு செய்த பணத்துக்கு வட்டியும் தராமல், முதலீடையும் திருப்பித்தராமல் ரூ.3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன் என்பவரின் புகார் அடிப்படையிலேயே இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அதன்பின் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் அவர்களின் முதலீடு குறித்து விசாரணை செய்தனர். ஆனால் போலீஸார் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்து எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் உச்சிப்புளி வட்டாரத்தில் ஆசிரியராகவுள்ள ஆரோக்கிய ராஜ்குமார். நிதி நிறுவன மோசடியில் கைதான ஆனந்த் நிறுவனத்தில் தனக்குத் தெரிந்தவர்களை முதலீடு செய்ய வைத்துள்ளார். கடந்த ஜூலை 1 நள்ளிரவில் ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமாரின் வீட்டுக்கு காவல் என எழுதப்பட்ட காரில் (டாடா சுமோ) வந்த 4 பேர் கும்பல் அவரை காரில் ஏற்றிச் சென்றுள்ளது.
கழுகூரணி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிவந்த அக்கும்பல், ஆரோக்கிய ராஜ்குமாரை துன்புறுத்தியதுடன், ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. கும்பலில் வந்தவர்கள் தங்களை போலீஸ் என கூறியதுடன், ஜூலை 2 அதிகாலையில் ராமேசுவரம் சாலை போக்குவரத்து நகர் பகுதியில் இறக்கிவிட்டனர் அதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு குறைதீர்க்கும் கைபேசி எண்ணில் தகவல் தெரிவித்துவிட்டு, கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிரியரை கடத்திச் சென்றதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார் கடத்தப்பட்ட கார் சென்ற வழிகளில் உள்ள சிசிடிவி காமிராக் காட்சிகளையும் சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர் காவல் என எழுதப்பட்ட வாகனத்தில் ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.