பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைதான கன்னியாகுமரி இளைஞர் காசயின் கூட்டாளியான தினேஷ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி(26) என்பவர் இன்ஸ்டாகிராம், முகநூல் உட்பட சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிதததாக போலீஸார் கைது செய்தனர். பல பெண்கள் தொடர்ந்து புகார் அளித்ததாலும், ஏற்கனவே மோசடி வழக்குகள் இருந்ததாலும் காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காசியின் நண்பரான டேசன் ஜினோ என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இருவரையும் சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். காசியின் சிம்கார்டு, மற்றும் லேப் டாப்பில் சேமிக்கப்பட்டிருந்த பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை மீண்டும் பெறுவதற்கு சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சோதனை நடந்து வருகிறது.
மேலும் காசியுடன் சேர்ந்து பெண்களை ஏமாற்றியது, மற்றும் அவருக்கு உதவிய கூட்டாளிகள் பலரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் காசியின் நெருங்கிய கூட்டாளியான கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(25) என்பவரை இன்று சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காசியுடன் தொடர்பில் இருந்த முக்கிய பிரமுகர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் காசி வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.