கைது செய்யப்பட்ட செல்வகுமார் 
க்ரைம்

அரியலூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

அரியலூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக மகன் தாக்கியதில் பலத்த காயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த வழக்கில் மகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லபாண்டியன் (60). விவசாயியான இவர் தனக்குச் சொந்தமான 30 சென்ட் இடத்தைக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடமானம் வைத்து ஆட்டு வியாபாரி சாமிதுரை என்பவருக்குப் பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த விஷயம் நேற்று முன்தினம் செல்லபாண்டியன் மகன் செல்வக்குமார் (30) கவனத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, சாமிதுரையிடம் கொடுத்த பணத்தைப் பெற்று அடமானம் வைத்த இடத்தை மீட்கும்படி செல்வகுமார் தனது தந்தை செல்லபாண்டியனிடம் கூறியுள்ளார்.

இதில், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது. அப்போது, வீட்டில் இருந்த உலக்கையால் செல்லபாண்டியனை, செல்வகுமார் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லபாண்டியன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 6) காலை சிகிச்சை பலனின்றி செல்லபாண்டியன் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக செல்வகுமாரை கயர்லாபாத் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT