கொடைக்கானல் மலைப்பகுதியில் வனத்திற்குள் கஞ்சா செடிகளை பயிரிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடிவருகின்றனர். கஞ்சா பயிர்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவடடம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலாத்தலமான தூண்பாறை பின்புறமுள்ள அடர்ந்த வனப்பகுதியின் நடுவேகஞ்சா பயிரிட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் உத்தரவின்பேரில் கொடைக்கானல் போலீஸார், வனத்துறையினர் சோதனை நடத்தினர். தூண்பாறை பின்புறம் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஒரு ஏக்கர் பரப்பில் கஞ்சா பயிரிட்டிருந்தது தெரிந்தது.
இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து காணப்பட்டது. உடனடியாக கஞ்சா பயிர்கள் முழுவதையும் தீயிட்டு அழித்தனர். அப்பகுதியில் பதுங்கியிருந்த கொடைக்கானல் வில்பட்டியை சேர்ந்த சக்திவேல்(50), கும்பூர் பகுதியை சேர்ந்த பாண்டி(31) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி(60), வீரமணி(45) ஆகியே இருவரையும் தேடிவருகின்றனர்.
வனப்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பில் கஞ்சா பயிரிட்டு பயிர்கள் நன்கு வளர்ந்த நிலைவரை வனத்துறையினருக்கு எப்படி தெரியாமல் போனது என்பது குறித்து கொடைக்கானல் மலைப்பகுதி மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி அப்பகுதி வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்திவருகிறார்.