சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டி பழுதானதால் விவசாயி உடல் அழுகியது. இதையடுத்து அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி அருகே நாகவயல் பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்தியசீலன் (48). இவர் நேற்றுமுன்தினம் காலை தனது தோட்டத்தில் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதையடுத்து சத்தியசீலன் உடல் பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இரவு நேரம் என்பதால் பிரேத பரிசோதனை செய்யாமல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டது.
ஆனால் குளிர்சாதன பெட்டி பழுதடைந்து இருந்ததால் சத்யசீலன் உடல் முழுவதும் அழகியது. இதனால் நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள உடலை எடுத்தபோது அழுகிநிலையில் இருந்தது. இதையடுத்து சத்யசீலனின் உறவினர்கள் பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களை போலீஸார் சமரசப்படுத்தி, உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிணவறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை முறையாக பராமரிக்காததால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘பணியில் இருந்த ஊழியர் குளிர்சாதனப் பெட்டி சுவிட்சை ஆன் செய்யாமல் விட்டுவிட்டார். இதனால் உடல் அழுகிவிட்டது. இனிஇதுபோன்ற நிகழ்வு நடைபெறாது,’ என்று கூறினர்.