சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப பிரச்சினையில் கணவரை மிரட்டுவதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய மனைவி மீது கணவர் தீ வைத்தார். இதில் மனைவி இறந்தார். கணவர் காயமடைந்தார்.
காரைக்குடி குறிச்சிகண்மாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ( 40). ஸ்டிக்கர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுகந்தி (35 ). இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு 6 வயதில் ஆண் குழந்தை, 3 வயதில் பெண் குழந்தை உள்ளன.
கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை மிரட்டுவதற்காக சுகந்தி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார்.
ஆத்திரமடைந்த செந்தில், சுகந்தி மீது தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் வலியால் துடித்த சுகந்தி அருகில் இருந்த செந்திலை கட்டி பிடித்தார். இதில் இருவரும் காயமடைந்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுகந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். சிவகங்கை மருத்துவமனையில் செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.