கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையம். 
க்ரைம்

11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் இரு இளைஞர்கள் கைது

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் வேப்பனஹள்ளியில் உள்ள பள்ளி ஒன்றில், 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், அங்குள்ள மற்றொரு பள்ளியொன்றில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் இரு தினங்களுக்கு முன்பு வேப்பனஹள்ளி பேருந்து நிலையத்தில் அந்த மாணவன் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது மதுபோதையில் அங்கு வந்த மாணவனின் நண்பர்களான ஜோடுகொத்தூரைச் சேர்ந்த ராஜா (26), திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மஞ்சுநாத் (22) இருவரும் மது கலந்து வைத்துள்ள குளிர்பானத்தை மாணவியிடம் சாதாரண குளிர்பானம் எனக் கொடுத்து பருக வைத்துள்ளனர். பின்னர் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த மூன்று பேரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, பள்ளிச் சிறுவனைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த இளைஞர்கள் இருவரையும் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (பிப்.25) இரவு ராஜா, மஞ்சுநாத் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT