க்ரைம்

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி வழக்கு: காவல் ஆணையர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

செய்திப்பிரிவு

போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்காக ஆஜரானார்.

கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. 2015-ம் ஆண்டு அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து ரூ 90 லட்சத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரூ. 2 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி மந்தைவெளி வீட்டுக்கு சீல் வைத்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை தரப்பில் நோட்டீஸ் கொடுத்த அன்றைய தினமே முன் ஜாமீன் வழங்கியது குறித்து விளக்கம் கேட்டு காவல்துறை சார்பில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது.

அதன்படி அவரை இன்று விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத்துக்குப் போகும் முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி ஈஸ்வரமூர்த்தி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார்.

SCROLL FOR NEXT