கோவை இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளிகளுள் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற நால்வருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கோவை குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை செல்வபுரம் ஐயுடிபி காலனி அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி, செல்வராஜ், ஆனந்த் என்பவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக செல்வபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அதன் இறுதியில், கோவையைச் சேர்ந்த சி.சூர்யா (20), ஆர்.சூர்யா(20), மோகன்ராஜ் (22) ,விக்னேஷ்குமார் (22), விஜயராஜ்(22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பழிக்குப் பழியாக இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று (ஜன.31) இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, மோகன்ராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதமும், மற்ற 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.