ரியாத்திலிருந்து சென்னை வந்த சவுதி அரேபியன் ஏா்லைன்ஸ் விமான சீட்டின் பின்பக்க பையில் ரூ.22.5 லட்சம் மதிப்புடைய 585 கிராம் தங்க நெக்லஸ்கள், கம்மல்களை சுங்கச்சாவடி சோதனைக்குப் பயந்து பயணி விட்டுவிட்டு தப்பிச் சென்றார். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து போயிங் விமானம் ஒன்று நேற்று வந்தது. விமானம் நின்றவுடன் பயணிகள் இறங்கிச் சென்றவுடன் ஊழியர்கள் விமானத்தை ஆய்வு செய்தபோது ஒரு சீட்டின் முன் பக்கம் உள்ள கவரில் பெரிய பை ஒன்று இருந்தது. அதில் சிவப்புக்கலர் டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் ஒன்று இருந்ததால் ஊழியர்கள் வெடிகுண்டாக இருக்கலாம் என பயந்துபோய் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தியதில் அது தங்க நகைகள் அடங்கிய நகைப்பை எனத் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அதைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். சோதனையில் 27 தங்க நெக்லஸ்கள், 53 தங்கத் தோடுகள் இருந்தன. அவை அனைத்தும் ரியாத்திலிருந்து பயணி விமானம் மூலம் கடத்தி வந்துள்ளார்.
மொத்தம் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள 585 கிராம் தங்க நகைகளைக் கடத்தி வந்த கடத்தல் நபர், விமான நிலையத்தில் கெடுபிடியான சுங்கச் சோதனை இருப்பதை அறிந்து, விமான இருக்கைக்கு அடியில் நகை பார்சலை மறைத்து வைத்துவிட்டுத் தப்பியோடியது தெரியவந்துள்ளது.
விமானம் மற்றும் விமான நிலையத்தில் உள்ள ரகசியக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கடத்தல் நபரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.