க்ரைம்

ராஜபாளையம் - தென்காசி சாலையில் வேனும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி; 20 பேர் காயம் 

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் மதுரையிலிருந்து தென்காசி நோக்கிச் சென்ற வேனும், குற்றாலத்தில் இருந்து சிவகாசி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - தென்காசி சாலையில் அரசு மருத்துவமனைக்கு முன்பாக உள்ள பாலம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் கார் மோசமாக சேதமடைந்தது என்பதால் விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரே காரில் இருந்த உடல்களை மீட்டனர்.

வேனில் இருந்தவர்கள் தென்காசியில் இருந்து மதுரைக்கு திருமண வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பியவர்களாவர். காரில் இருந்தவர்கள் சிவகாசியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குற்றாலம் சென்றுவிட்டு சிவகாசி திரும்பிக்கொண்டிருந்தனர்.

விபத்தில் காரில் பயணம் செய்த ஐயப்பன், சுடலைமணி, முத்துகுமார், அந்தோணி ஆகிய4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காரில் இருந்த பிரபு என்பவர் பலத்த படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வேனில் வந்தவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT