மதுரை
பிளக்ஸ் பேனர் தடையால் மதுரை சமயநல்லூரில் பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ, பலியானார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தற்போது பிளக்ஸ் பேனர் தொழில் செய்வதற்கும், பொதுஇடங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அனுமதியில்லாமல் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர் அகற்றப்படுவதோடு, அதன் உரிமையாளர்கள், பிளக்ஸ் பேனர் அச்சடித்து கொடுத்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
அதனால், தற்போது பிளக்ஸ் பேனர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளால் கட்டுப்பாடுகளை தளர்த்தகோரி அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து முறையிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை சமயநல்லூரில் பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விக்னேஷ்(26) என்பவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரைக் காப்பாற்றினர். தற்போது நலமுடன் உள்ளார்.
பிளக்ஸ் பேனர் தொழில் வைப்பதற்காக விக்னேஷ் வங்கியில் கடன் பெற்றுள்ளார். தற்போது தொழில் நலிவடைந்ததால் அவரால் கடனை அடைக்க முடியவில்லை. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், தற்கொலைக்கு முயன்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.