க்ரைம்

நூதன முறையில் தங்கச் செயினைப் பறித்த வடமாநில இளைஞர்; அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

இ.மணிகண்டன்

ராஜபாளையம்

ராஜபாளையம் ஆணையூர் தெருவில் பாலிஷ் போடுவதாகக் கூறி தங்கச் செயினைப் பறித்துச் சென்ற பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆணையூர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. அவரிடம் கடந்த வாரம் வடமாநில இளைஞர் ஒருவர் கொலுசு பாலிஷ் போடுவதாகக் கூறி கொலுசை வாங்கியுள்ளார். பாலீஷ் போட்டு முடித்த பின் உங்களுடைய தங்கச் செயினில் அழுக்கு இருக்கிறது அதையும் கழற்றிக் கொடுங்கள் எனக் கூறியுள்ளார். அழுக்கு எடுத்துக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய ராஜேஸ்வரி, செயினைக் கழற்றிக் கொடுத்துவிட்டு கொலுசை எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றுள்ளார். இதற்காகவே காத்திருந்த வடமாநில இளைஞர், தங்கச் செயினுடன் தப்பி ஓடியுள்ளார். இது சம்பந்தமாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அந்த இளைஞர் ராஜபாளையம், குமரன் தெரு பகுதியில் சுற்றித் திரிந்ததைப் பார்த்த ராஜேஸ்வரி அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரைப் பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்ததில் அந்த இளைஞர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மண்ணு குமார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் வேறு எதாவது குற்றச் சம்பவங்களில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளாரா என்று போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT