திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே வயதான பெண்மணியை அரிவாளால் வெட்டி 40 கிராம் நகையை முகமூடிக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இருந்தாலும், துணிச்சலுடன் போராடி முகமூடிக் கொள்ளையர்களை வயதான தம்பதியர் விரட்டியடித்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70). இவரது மனைவி செந்தாமரை (65). இவர்கள், தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுடைய பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே, சண்முகவேல், செந்தாமரை ஆகிய இருவர் மட்டும் அங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு (ஞாயிறு இரவு) வீட்டின் போர்டிகோ பகுதியில் சண்முகவேலு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு 2 கொள்ளையர்கள் வீட்டில் புகுந்தனர்.
அவர்களில் ஒருவர், துணியால் சண்முகவேலின் கழுத்தை இறுக்கினார். இதனால், அவர் கூச்சலிட்டார். உடனடியாக, வீட்டுக்குள் இருந்த செந்தாமரை வெளியே ஓடி வந்தார். அவர், செருப்பு, நாற்காலி, உள்ளிட்டவற்றைத் தூக்கி எறிந்து, அந்தக் கொள்ளையர்களை விரட்ட முயன்றார்.
அப்போது, முகமூடிக் கொள்ளையரில் ஒருவர், செந்தாமரை அணிந்திருந்த 40 கிராம் நகையைப் பறித்தார். இதைத் தடுக்க முயன்றபோது, செந்தாமரையின் கையில் அந்த நபர் அரிவாளால் வெட்டினார். இருப்பினும் செந்தாமரை துணிச்சலுடன் போராடினார்.
முகமூடிக் கொள்ளையரின் பிடியில் இருந்து தப்பிய சண்முகவேலுவும் நாற்காலிகளைத் தூக்கி கொள்ளையர்களை நோக்கி வீசினார். வயதான தம்பதி இருவரும் துணிந்து போராடி, முகமூடிக் கொள்ளையர்களை விரட்டியடித்தனர்.
பின்னர், இதுகுறித்து கடையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவம் சண்முகவேல் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவுகளைக் கொண்டு, கொள்ளையர்கள் யாரென போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்களில் ஒருவர் பேன்ட், சட்டையும், மற்றொருவர் லுங்கி, சட்டையும் அணிந்துள்ளனர். இருவரும் அரிவாளைக் காட்டி மிரட்டியும், துணிச்சலுடன் அவர்களை எதிர்கொண்டு தம்பதியர் விரட்டியடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.