கைது செய்யப்பட்ட விக்னேஷ்வரன்
சிவகாசி: சிவகாசி அருகே 3 வயது குழந்தையை சித்ரவதை செய்து கொலை செய்த தாயின் இரண்டாவது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே வைகோ நகரை சேர்ந்தவர் சுவாதி (22). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் துரைப்பாண்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷ்ணுபிரியா (3) என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டுக்கு மேலாக சுவாதி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
சுவாதி – துரைப்பாண்டி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சுவாதி வெம்பக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்த போது, அங்கு வேலை பார்த்த சிவகாசி பேராபட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் 20 நாட்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து திருத்தங்கல் பசும்பொன் நகரில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
நேற்று இரவு விக்னேஷ்வரன் சுவாதி மற்றும் குழந்தையை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதில் தலைமுடிகள் பிடுங்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட குழந்தை விஷ்ணுபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்து வந்த போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருத்தங்கல் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, விக்னேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.