தீபக்ராஜ், பியூட்டரின், ராஜ்பிரசாத்

 
க்ரைம்

மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து: தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

4 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக்ராஜ் (19), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பியூட்டரின் (22), கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்பிரசாத் (19) ஆகிய மூவரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர்.

புதுவையில் இருந்து திரும்பினர்: இவர்கள் தங்களின் கல்லூரி நண்பர்களான கரூரைச் சேர்ந்த ரகுபிரசாத் (19), லோகேஸ்வரன் (18), சென்னை, ஆலந்தூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (19), கடலூரைச் சேர்ந்த அனிஸ்வரன் (18), ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ஹரிகிருஷ்ணன் ஓட்டியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் புறவழிச் சாலையில் கார் வந்த போது காரின் பின்பக்க டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், மதுராந்தகம் மருத்துவமனையில் தீபக்ராஜ், பியூட்டரின் ஆகியோரும் செங்கல் பட்டு மருத்துவமனையில் ராஜ்பிரசாத்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 4 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 பேரின் நிலை கவலைக்கிடம்: இதில் லோகேஸ்வரன் உடல்நிலை சீராக உள்ளது, மற்ற மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரி வித்தன. விபத்து தொடர்பாக மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரவில் நடைபெற்ற இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT