வண்டலூர்: வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சாந்தி (56). இவரது மகள் தட்சிணாமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சாந்தியும் அவரது மகளும் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இந்நிலையில் மே 22-ம் தேதி வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பிய சாந்தி பீரோவில் இருந்த 24 சவரன் நகை, ரூ.2 லட்சம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து வண்டலூர் - ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சாந்தியின் மருமகன் தட்சிணாமூர்த்தியை அழைத்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதில் சந்தேகமடைந்த போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் தட்சிணாமூர்த்தி, தன் ஆட்டோவில் 2 பெண்களை அழைத்து வந்து சாந்தி வீட்டுக்குள் நுழைவதும், சிறிதுநேரம் கழித்து அங்கிருந்து வெளியேறுவதும் தெரிய வந்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில், மாமியார் வீட்டிலிருந்து 24 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணத்தை தோழிகளுடன் சேர்ந்து திருடியதை தட்சிணாமூர்த்தி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, தட்சிணாமூர்த்தி, அவருக்கு உடந்தையாக இருந்த தீபா (29), மற்றும் 17 வயது சிறுமியை போலீஸார் கைது செய்து நகை, பணத்தை மீட்டு சிறையில் அடைத்தனர்.