சென்னை: உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்து வந்த ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, கொடுங்கையூர் போலீஸார் கடந்த மாதம் 29-ம் தேதி கொடுங்கையூர், சுகந்தம்மாள் நகர், கார் பார்க்கிங் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த இளைஞரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரது உடமைகளை சோதித்தபோது உடல்வலி நிவாரண மாத்திரைகள், சிரஞ்சிகள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது. இதையடுத்து,
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார். கொடுங்கையூரைச் சேர்ந்த மகேஷ் (36) என்பவரை கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு: அவரது கூட்டாளியான கொடுங்கையூரைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்ற மணி (34) தலைமறைவாக இருந்தார். தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, மணியை கைது செய்துள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்கெனவே 18 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.