சென்னையில் உள்ள 37 துணை தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்களின் வீடுகள், பள்ளிகள், விமான நிலையங்கள், தூதரகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை டிஜிபி அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்று காலை ஒரு மின்னஞ்சல் வந்தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜப்பான் துணை தூதரகம் உட்பட 37 நாடுகளை சேர்ந்த துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். 37 தூதரக அலுவலகங்களுக்கும் சென்ற போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகப்படும் பொருட்கள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை.
இதையடுத்து, குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம் இலங்கை, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா உட்பட 20 துணை தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.