சென்னை: வீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தனது 6 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். வேலைக்குச் செல்லும்போது, மகளை தாயின் பராமரிப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த 2024 மார்ச் மாதத்தில், வீட்டு வாசலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 62 வயது முதியவர் ஒருவர் அந்த சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று, ஆடைகளைக் களைந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி தெரியவந்த சிறுமியின் தாய், முதியவரை தட்டிக்கேட்டுள்ளார். இதை வெளியே கூறினால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக முதியவர் மிரட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், முதியவரை கோயம்பேடு மகளிர் போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பத்மா முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.