சென்னை: நிதி நிறுவனம் நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர், மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வளசரவாக்கம் அருகே காரம்பாக்கம், பொன்னிநகர், விவேகானந்தர் தெருவில் வசிப்பர் தளபதி பாஸ்கர் (52).
இவர், போரூரில் சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந் நிறுவனம் நடத்தியதில் பாஸ்கருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மிகவும் விரக்தியுடனும், வேதனையுடனும் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பாஸ்கர், அவரது மனைவி தேன்மொழி (45) ஆகிய இருவரும் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் கிடப்பதை பார்த்த, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், இருவரையும் மீட்டு வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர். இதில் பாஸ்கர், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.