கரூர்: வேலுச்சாமிபுரம் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.
இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த கரூர் நகர போலீஸார் அடையாளம் தெரியாத 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசனை (40) கரூர் நகர போலீஸார், சேலத்தில் அக்.9-ம் தேதி கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வெங்கடேசன் அக்.13-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி இளவழகன் முன்னிலையில் இம்மனு இன்று (அக்.15ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.