சென்னை: சமூக ஊடகங்களில் நீதிபதி குறித்து விமர்சனம் செய்த தவெக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தவெக தலைவர் விஜய், கரூரில் கடந்த 27-ம் தேதி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, கடந்த 3-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தார். பிரச்சார கூட்டத்துக்கு விஜய் சென்ற பேருந்து விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன்? அந்த பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதற்கிடையே, நீதிபதியின் இந்த கருத்துக்கு, தவெக.வைச் சேர்ந்த சிலர் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், இச்செயலில் ஈடுபட்டது புதுக்கோட்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன்(25), கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த தவெக உறுப்பினர் டேவிட்(25), சென்னை அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சசிகுமார் (48), தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த 4 பேரையும் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, 4 பேரும் தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.