மதுரை: மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தவறான தகவலை அளித்து பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக நேற்று காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவல் போலியானது என்பது தெரியவந்தது.
இது குறித்து மாட்டுத் தாவணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெடிகுண்டு இருப்பதாக தவறான தகவலை பரப்பியவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் (46) என்பது தெரியவந்தது. மேலும், தூத்துக்குடி மாவட்டம் பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடாச்சலத்தை மாட்டுத்தாவணி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.