சென்னை: தனியார் நிறுவன அதிகாரியின் 162 பவுன் நகைகளை அடமானம் வைப்பதாக நூதன முறையில் ரூ.90 லட்சம் மோசடிசெய்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை சைதாப்பேட்டை,விஜிபி சாலையில் வசிப்பவர் சுலைமான் (32). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார்.
இவர் கிண்டி, லாயர் ஜெகநாதன் தெருவில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், எடுத்தும் வந்ததால் வங்கி மேலாளர் சாமிநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் நீங்கள் பணம் எடுக்க வங்கிக்கு நேரில் வர வேண்டாம். நானே ஊழியரை அனுப்புகிறேன் என்று தெரிவித்ததால் சுலைமான் பணம் எடுக்க தேவைப்படும்போது, மேலாளர் சாமி நாதனை தொடர்பு கொண்டவுடன் அவர் ஊழியர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பி, படிவங்களை பூர்த்தி செய்து பணம் கொடுத்துவிடுவார்.
இதுபோல கடந்த ஜூலை 2-ம் தேதி மேலாளர் சாமிநாதனை சுலைமான் தொடர்பு கொண்டு, அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைக்க வேண்டும் எனக் கேட்டபோது, பிரசாத் என்ற வங்கிக் காசாளரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, சுலைமான் தன்னிடமிருந்த 162 பவுன் நகைகளை கொடுத்து, படிவங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். பின்னர், மேலாளர் சாமிநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு, அடமானம் வைத்த நகைக்கான பணத்தை கேட்ட போது, பல காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தியுள்ளார்.
சந்தேகம் அடைந்த சுலைமான் ஜூலை 15-ம் தேதி வங்கிக்கு சென்று விசாரித்தபோது, மேலாளர் சாமிநாதன் வங்கியில் பலரிடம் இதே பாணியில் பண மோசடியில் ஈடுபட்டதால், சஸ்பெண்ட்செய்யப்பட்டது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சுலைமான் இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், புழுதிவாக்கம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த காசாளர் பிரசாத் (25), அவ்வங்கியின் ஊழியர்கள், மேலாளர் சாமிநாதனுடன் சேர்ந்து, அவர் கொடுக்கும் தங்க நகைகளை உபயோகத்தில் இல்லாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் அடமானம் வைத்து, போலி கையெழுத்து இட்டு பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதேபோல்தான், சுலைமானின் 162 பவுன் நகைகளைஅடமானம் வைத்து ரூ.90 லட்சம் பெற்றதும் தெரிந்தது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட காசாளர் பிரசாத், வங்கி இயக்க மேலாளரான கே.கே.நகரைச் சேர்ந்த திவாகர் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட மேலாளர் சாமிநாதன் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர்.