சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில், ‘பிட்காயின்’ மாற்றும் விவகாரத்தில் 6 பேரை காரில் கடத்தி சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சுப்புராயன் தெருவில் வசித்து வருபவர் தேசிக மூர்த்தி(50). இவர் ஆயிரம் விளக்கு பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் புரோக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி காலை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்ற தேசிக மூர்த்தி இரவு வீடு திரும்பவில்லை.
மறுநாள், காலை தேசிக மூர்த்தியின் மகன் பரத்(20) செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர்கள், ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தால் தான் தேசிக மூர்த்தியை உயிரோடு அனுப்புவோம் என கூறி போனை துண்டித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பரத், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, தேசிக மூர்த்தியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தேசிக மூர்த்தி செல்போன் சிக்னல், பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் காட்டியதை யடுத்து, அப்பகுதிக்கு போலீஸார் விரைந்து சென்றனர்.
அங்கு, ஒரு கட்டிடத்துக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த தேசிக மூர்த்தியுடன் இருந்த 6 பேரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும், அவர்களை அடைத்து வைத்திருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை குறித்து போலீஸார் கூறுகையில், ‘முகப்பேரை சேர்ந்த பாரதி என்ற பெண் பிட்காயின் வாங்கி விற்கும் வேலை செய்து வந்தார்.
இதற்காக தேசிக மூர்த்தி அலுவலகத்தை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இதில் கிடைக்கும் லாபத்தில் தேசிக மூர்த்திக்கும் பங்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், புளியந்தோப்பை சேர்ந்த அருண் குமார் (36), வியாசர்பாடியை சேர்ந்த பார்த்திபன் (55) உட்பட சிலர், தங்களிடம் 1.50 லட்சம் பிட்காயின் உள்ளதாகவும், அதை மாற்றி தருமாறும் பாரதியிடம் கேட்டு, அவரது கணக்குக்கு அனுப்பி உள்ளனர்.
பாரதி மும்பையை சேர்ந்த அகர்வால் என்பவர் மூலம் பிட்காயினை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள தன் அலுவலக ஊழியர்கள் மூலம் அகர்வால் ரூ.1.38 கோடியை கொடுத்தனுப்பியுள்ளார். அவர்கள் ஆயிரம் விளக்கு அலுவலகத்து வந்தனர். பாரதி 1.50 லட்சம் பிட்காயினை, அகர்வாலின் கணக்குக்கு மாற்றும்போது, அந்த பிட்காயின் காணாமல் போனதாக தெரிகிறது.
இந்நிலையில், அகர்வாலின் கணக்குக்கு பிட்காயின் வராததால், அவரது அலுவலக ஊழியர்கள் பணத்தை கொடுக்காமல் திரும்ப சென்றனர். இதனால், பாரதி மற்றும் அவரது நண்பர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக, ஆயிரம் விளக்கு அலுவலகத்து வந்த அந்த கும்பல், அலுவலகத்தில் இருந்த தேசிக மூர்த்தி, பாரதி மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 6 பேரை தாக்கி பணம் கொடுக்கும்படி மிரட்டி அவர்களை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இந்நிலையில், பெரம்பூர் அருகே அவர்களை மீட்டு, கடத்தி சென்ற அருண்குமார், பார்த்திபன் இருவரையும் கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகிறோம்,’ என்றனர்.