சென்னை: மருத்துவம் மற்றும் மின்சாரத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே.நகர், 45-வது தெருவில் வசித்து வருபவர் மதியழகன் (38). தனியார் நிறுவனம் ஒன்றில் மருந்தாளுநராகப் பணி செய்து வருகிறார்.
இவருக்கு தொழில் ரீதியாக கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட் (38) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. தமிழ்நாடு மருத்துவத் துறை மற்றும் மின்சாரத் துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்களை எங்களுக்கு நன்கு தெரியும். மருத்துவத் துறை வேலைக்கு ரூ.7 லட்சம், மின்சாரத் துறை வேலைக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் அந்த வேலைகளில் சேர்த்து விடுவதாக இவர்கள் மதியழகனிடம் கூறியுள்ளனர்.
இதை நம்பிய மதியழகன் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள் என 15 பேர் சேர்ந்து ரூ.45 லட்சத்து 41 ஆயிரத்தை வான்மதி மற்றும் பினகாஷ் எர்னஸ்ட்டிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி அரசு வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்படி போலீலார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பினகாஷ் எர்னஸ்ட் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர்.