நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, செல்போனில் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களை படம் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுதிர் ராம்சந்த புல்சந்தானி என்ற 70 வயது முதியவர் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக கடந்த செப்.3 அன்று சென்னை பெருநகர 10-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது தனக்கு எதிராகப் புகார் அளித்தவரையும், பெண் ஊழியர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களையும் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறி, அவரை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சுதிர் ராம்சந்த் புல்சந்தானி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் மற்றும் வழக்கறிஞர் எஸ்.இம்மானுவேல் ஆகியோர் ஆஜராகி, "நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த மனுதாரரை பொய் வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 70 வயதாகும் அவருக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடய அறிவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிட்டனர்.
அதற்கு காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, "மனுதாரரின் வயதைக் கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் ரூ.10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தினமும் காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்" என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.