சென்னை: வடபழனியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் என இருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
அதில், 2023-ம் ஆண்டு சென்னை கொளத்தூரை சேர்ந்த ஏகன் (39), பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த தீபக் ஜெயின் (42) ஆகியோர் தங்கள் பெயரில் மெடிக்கல் ஸ்கேன் சென்டர் ஆரம்பித்து நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க வேண்டும் எனக் கூறி, நம்ப வைத்து கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தினர். இதில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக உறுதி அளித்தனர். இதை உண்மை என நம்பி நாங்கள் இருவரும் எங்களது பெயரில் வங்கியில் கடன் பெற ஒப்புதல் அளித்தோம். அதன்படி, ரூ.7 கோடி கடன் பெறப்பட்டது.
ஆனால், ஏகன் மற்றும் தீபக் ஜெயின் இருவரும் மருத்துவ உபகரணங்கள் வாங்காமல், வங்கியில் எங்களது பெயரில் வாங்கிய கடன் தொகையையும் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டனர். தற்போது, வங்கி அதிகாரிகள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
எனவே, எங்களை ஏமாற்றி, எங்களது பெயரில் கூட்டு ஒப்பந்தம் மூலம் கடன் பெற்று, ரூ.7 கோடி மோசடியில் ஈடுபட்ட ஏகன், தீபக் ஜெயின் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மோசடி நடைபெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, புகாருக்குள்ளான இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.