கும்பகோணம்: பாமக மாநில நிர்வாகியும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை நேற்று ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை மேல மருத்துவக்குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின்.
ஆடுதுறை பேரூராட்சித் தலைவரான இவர், பாமக மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தனது அறையில் ஸ்டாலின் அ மர்ந்திருந்தார்.
அவரது ஆதரவாளர்கள் இளையராஜா(42), அருண்(25) ஆகியோர் வெளியில் இருந்தனர். திடீரென ஒரு காரில் வந்த 8 பேர் முகமூடி அணிந்து அலுவலகத்துக்குள் புகுந்து, நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் அலுவலகத்தில் இருந்த நாற்காலி, கண்ணாடிகள் சேதமடைந்தன.
தொடர்ந்து, அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற கும்பலைத் தடுக்க முயன்ற இளையராஜா, அருண் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதையறிந்த ம.க.ஸ்டாலின் ஓசையின்றி தனது அறையில் உள்ள கழிப்பறைக்குள் சென்றுவிட்டார். அவர் இருக்கையில் இல்லாததை அறிந்த அக்கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுவிட்டது.
சாலை மறியல், கடையடைப்பு: இதுகுறித்து தகவலறிந்த ம.க.ஸ்டாலினின் ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர். மேலும், ஆடுதுறை, திருமங்கலக்குடி சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
தகவலறிந்து வந்த தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஆடுதுறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை முயற்சிக்கு காரணம் முன்விரோதமா அல்லது உட்கட்சிப் பிரச்சினையா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து ம.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் போலீஸார் பாதுகாப்பு அளிக்கவில்லை. ஏற்கெனவே வழங்கிய பாதுகாப்பையும் திரும்ப பெற்று விட்டனர். கொலை முயற்சி தொடர்பாக முறையாக விசாரிக்க வேண்டும்" என்றார்.