மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் பாரதியார் தெருவைச் சேர்ந்த ஜெய கோபால் என்பவரது மனைவி யமுனா பாய் (63). இவருக்கு சதிஷ், ரத்தீஷ் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு யமுனா பாய், வீட்டை பூட்டி விட்டு மகன் சதிஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். செப்டம்பர் 1-ம் தேதி காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 120 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த மறைமலை நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், யமுனா பாய் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பேருந்தில் தப்பிச் செல்வதை கண்டறிந்துள்ளனர்.
தொடர் விசாரணையில், அவர்கள் சென்ற பேருந்து கடலூர் செல்லும் பேருந்து என்பது தெரிய வந்தது. உடனடியாக கடலூருக்கு விரைந்த தனிப்படை போலீஸார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம், நெல்லிகுப்பம் பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் (31) மற்றும் அவரது நண்பரான சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (25) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 119 சவரன் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் முருகன், சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும் கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "கைது செய்யப்பட்ட செந்தில் முருகன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் கொள்ளையடித்த நகைகளை உடனடியாக விற்பனை செய்தால் சிக்கிக் கொள்வோம் என்பதால் நகைகளை புதைத்து வைத்துள்ளனர். கொள்ளை நடந்த இடத்தில் இருந்து அவர்கள் சென்ற இடம் வரை உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்து இருவரையும் கைது செய்துள்ளோம்” என்றனர்.
இதனிடையே, கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டியுள்ளார்.