நாமக்கல்: சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள வேம்படிதாளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் நேற்று காலை மனைவி சுசிலா (45), தாய் கமலம்(65) மற்றும் உறவினர்கள் மோகன் (45), அவரது மனைவி புவனேஸ்வரி (40) ஆகியோருடன் பவானி கூடுதுறையில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றார்.
பின்னர், அனைவரும் வேம்படிதாளம் புறப்பட்டுள்ளனர். காரை சுகுமார் ஓட்டினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் சுகுமார், அவரது தாய் கமலம், மோகன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சுசிலா, புவனேஸ்வரி ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.