கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர் ஜோதீஸ்வரி (30). எம்.பி.பி.எஸ். படித்த இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டமாகும். இவர் மீனம்பாக்கத்தி ல் உள்ள சி.ஜி.எச்., மத்திய அரசு மருத்துவமனையில், மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும், ராமநாதபுரத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியரான யுதிஸ்வரன் (34), என்பவருக்கும் இடையே, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.
கருத்து வேறுபாடு: யுதிஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் முடிந்து கணவன், மனைவி இருவரும் மூன்று மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்ததும், அதன்பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் யுதிஸ்வரன் மனைவியை பிரிந்து, சொந்த ஊருக்கே சென்று வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது மனைவியை பார்க்க வந்து சென்றதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் பெருங்களத்தூர் ஸ்ரீராம் கேட்டின் 12 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சகோதரி முத்துலட்சுமி வீட்டுக்கு ஜோதீஸ்வரி சென்றார். சகோதரி வீட்டில் இருந்துவிட்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார். குடியிருப்பு லிப்டுக்குள் சென்ற ஜோதீஸ்வரி கீழே செல்லாமல், மேலே சென்றார். மொட்டை மாடிக்கு சென்றதும், செருப்பு, கைப்பையை கழற்றி வைத்துவிட்டு கீழே குதித்தார். இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பீர்க்கன்காரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.