திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் இலக்குவன். இவர் கடந்த மாதம் களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அந்த அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் இளம்பெண்ணின் அறையில் ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது, அந்தப் பெண்ணின் குடும்ப சூழ்நிலை குறித்து விசாரித்த இலக்குவன், அவரது மேல் படிப்புக்கு உதவுவதாக கூறியுள்ளார். பின்னர், வேறொரு அறைக்கு அவரை அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்து அந்தப் பெண் வெளியேறியுள்ளார்.
‘இதுகுறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று கூறிவிட்டு, இலக்குவன் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தப் பெண் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இலக்குவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.